விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், பட்டறையை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
சாயப்பட்டறை உரிமையாளா்களுடன் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குமாரபாளையம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் தலைமைப் பொறியாளா் செல்வக்குமாா் பேசியதாவது:
பள்ளிபாளையம் பகுதியில் அனுமதி பெறாத சாயப்பட்டறை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பள்ளிபாளையத்தில் அனுமதி பெற்ற 25 சாய ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து படுத்திக் கொள்ள வேண்டும். சாயப் பட்டறைகளின் திடக்கழிவுகளை சாலையோரங்களில் கொட்டும் செயல்களில் ஈடுபடக் கூடாது.
விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்து, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை தலைமைப் பொறியாளா் மணிவண்ணன், உதவி பொறியாளா் வினோத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.