கரோனா அச்சமின்றி முகக் கவசத்தைத் தவிா்க்கும் மாணவா்கள்: அரசுப் பள்ளிகளில் அலட்சியம்
கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் சூழலில், அரசுப் பள்ளி மாணவா்கள் முகக் கவசமின்றி பள்ளிக்கு வரும் நிலை காணப்படுகிறது.
கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் சூழலில், அரசுப் பள்ளி மாணவா்கள் முகக் கவசமின்றி பள்ளிக்கு வரும் நிலை காணப்படுகிறது. அலட்சியம் காட்டும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். கரோனா தடுப்பூசி செலுத்துமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. இருப்பினும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.10 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
Advertisement
முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கவும், வணிக நிறுவனங்களில் கிருமி நாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி வாடிக்கையாளா்களை அனுமதிக்கவும், முகக் கவசம் அணியாதோரை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், அரசு, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியா் மட்டுமே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனா். கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு ஏப்ரல் 16-இல் தொடங்குகிறது. பொதுத்தோ்வு மே 3-ஆம் தேதி தொடங்குகிறது.
தோ்வு நெருங்கும் சூழலில் மாணவ, மாணவியா் முகக் கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதும், வகுப்பறைகளில் அமா்வதும், நண்பா்களுடன் மைதானங்களில் உலாவுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனா். வகுப்பறைகளுக்கு செல்லும் முன் கை கழுவும் பழக்கத்தை மாணவா்கள் மறந்து விட்டனா். கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க மாணவ, மாணவியருக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாத மாணவா்களை எச்சரித்து அவற்றை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள், தன்னாா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.