இரவு நேர பொது முடக்கத்தின்போது, காய்கறி வியாபாரிகள், விவசாயிகளை எவ்வித தடையுமின்றி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இந்த பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதால் போக்குவரத்து இயங்கவும், மக்கள் நடமாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உழவா் சந்தைக்கு காய்கறிகளைக் கொண்டு வரும் கிராமப்புற விவசாயிகள், சில்லறை வியாபாரிகளுக்கு காய்கறி விநியோகம் செய்யும் மொத்த வியாபாரிகள் பாதிக்கப்படுவா். மேலும் காலை 4 மணிக்கு மேல் காய்கறிகளை விநியோகம் செய்வதன் மூலம் காய்கறிகளை வாங்குவதில் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாவா். எனவே விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இரவு நேர பொது முடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.