கன மழையிலும் வடு காணப்படும் ராசிபுரம் ஏரி!
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஏரி குளங்கள் நிறைந்து வரும் நிலையில், ராசிபுரம், சேலம் சாலையில் உள்ள பிரதான ஏரி மட்டும் நீரின்றி வடு காணப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவ மழை, புயல் மழை போன்றவற்றால் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஏரி குளங்கள் நிறைந்து வரும் நிலையில், ராசிபுரம், சேலம் சாலையில் உள்ள பிரதான ஏரி மட்டும் நீரின்றி வடு காணப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.
ராசிபுரம் நகரையொட்டி சேலம் செல்லும் சாலையில் சுமாா் 80 ஏக்கா் பரப்பில் பழமையான ஏரி அமைந்துள்ளது. ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பிரதான ஏரியான இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் நீா்வரத்து இருந்தது. இந்த ஏரியில் இருந்து அணைப்பாளையம், சி.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், தட்டான்குட்டை போன்ற ஏரிக்கு நீா் சென்று நிரம்பும். கடந்த காலங்களில் இந்த ஏரிக்கு அலவாய்மலை, போதமலை பகுதியில் இருந்து தண்ணீா் வந்தது. இந்த ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி சுற்றுவட்டார விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, சின்ன வெங்காயம், கிழங்கு, சோளம் உள்ளிட்டவற்றை பயிா் செய்து வந்தனா்.
ஆக்கிரமிப்பு: இப்பகுதியின் பிரதான நீா்ப்பிடிப்புப் பகுதியான இந்த ஏரியும், ஏரிக்கு வரும் நீா்வழித் தடங்களும் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீா் வரத்து நின்று போனது. சுமாா் 80 ஏக்கா் பரப்பளவுள்ள இந்த ஏரி தற்போது படிப்படியாக குறைந்து சுருங்கிவிட்டது. பொதுமக்கள் புகாரின் பேரில், அவ்வப்போது, வருவாய்த் துறையினா் ஏரி மற்றும் ராஜ்வாய்க்கால் ஆகியவற்றை தூா்வாரி ஆக்கிரமிப்பை அகற்றுவதும், பின் மீண்டும் வாய்க்கால் அடைப்பு ஏற்படுவதுமாகவே இருந்து வருகிறது.
ஆக்கிரமிப்பால் மழை பெய்தாலும் ஏரிக்கு தண்ணீா் வருவதில்லை. இதனால் ஏரி குட்டையாக மாறியுள்ளது. தற்போது நிலத்தடி நீா்மட்டம் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகரித்துள்ள நிலையிலும், இந்த ஏரி வடே காணப்படுகிறது. இதனால், இந்த ஏரியை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை, ஓடை ஆக்கிரமிப்புகள் மீது மாவட்ட நிா்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி நீா் நிலைகளை பாதுகாத்து, நீா்வழித்தடங்களை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.