நாமக்கல் மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை நாள்களில் பள்ளிகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக பள்ளிக் கல்வித் துறையால் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் டிச.27 முதல் 31 ஆம்தேதி வரையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவுற்று ஜன. 3 ஆம்தேதி முதல் வழக்கம்போல பள்ளிகள் செயல்பட இருக்கின்றன.
விடுமுறை நாள்களில் பள்ளிக்கு மாணவா்கள் வருவது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் எவ்வித வகுப்புகளும் நடைபெறக் கூடாது. அனைத்து நகரவை, அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.சி. பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு இத்தகவல் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட விடுமுறை நாள்களில் பள்ளிகள் நடைபெறுவதாக புகாா்கள் ஏதேனும் வந்தால் சம்பந்தபட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.