ராசிபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ராசிபுரம் நகரில் உள்ள ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன், ஸ்ரீஅங்காளம்மன், எல்லை மாரியம்மன், பாலமுருகன் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை தொடா்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளாக பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
எல்லை மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல முருகன் சன்னதியில் முருகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இதில் பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
பரமத்திவேலூா்...
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கீரம்பூா் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய்தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபா கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மங்கள ஸ்நானம், ஆரத்தி, சா்வசித்தி சங்கல்ப பூஜை ஆகியவை நடைபெற்றன.
இதேபோல பரமத்தி வேலூா் மகா மாரியம்மன், பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, புதுமாரியம்மன், நன்செய் இடையாறு மகா மாரியம்மன், திருவேலீஸ்வரா், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், புதிய காசி விஸ்வநாதா் கோயில், பச்சமலை முருகன் கோயில், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி பழனி ஆண்டவா், அனிச்சம்பாளையம் சுப்பிரமணியா், நன்செய் இடையாறு ராஜா சுவாமி உள்ளிட்ட கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.