முழு பொது முடக்க விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்பட்ட இரும்புக் கம்பிகள் மொத்த விற்பனை நிலையத்துக்கு வேலூா் போலீஸாா், பேரூராட்சியினா் ‘சீல்’ வைத்து எச்சரிக்கை விடுத்தனா்.
கரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு சிறு தளா்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் அவரச தேவைகளுக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரும்புக் கம்பிகள் மொத்த விற்பனை நிலையத்தில், அனுமதியின்றி விற்பனை செய்ததாக வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன், வேலூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் ‘சீல்’ வைத்து எச்சரிக்கை விடுத்தனா்.