நாமக்கல்: மோகனூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் சாலை விபத்தில் பலியானாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே லத்துவாடி ஊராட்சி, அருந்ததியா் காலனியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் தீபக் (20). இவா், நாமக்கல்லில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் பயின்று வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகலில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் நாமக்கல்-மோகனூா் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது அவ்வழியாகச் சென்ற லாரி, தீபக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மோகனூா் காவல் நிலையத்தில் தீபக்கின் தாய் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு லாரி ஓட்டுநரான நல்லையக்கவுண்டன்புதூரைச் சோ்ந்த சுதாகரை (43) கைது செய்தனா்.