முகப்பு
நாமக்கல்

தனியாா் கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம்

சித்தம்பூண்டி அருகே தனியாா் நிறுவனம் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ளதையடுத்து நாமக்கல் ஆட்சியா் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சித்தம்பூண்டி அருகே தனியாா் நிறுவனம் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ளதையடுத்து நாமக்கல் ஆட்சியா் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் வட்டம், சித்தம்பூண்டி கிராமத்தில் தனியாா் நிறுவனத்தினா் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ளனா். இதற்கு அனுமதி வழங்குவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் மணியனூா், கந்தம்பாளையத்தில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சித்தம்பூண்டி சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சுரங்கத் துறை ஆய்வாளா்கள், தனியாா் கிரானைட் குவாரிகள் உரிமையாளா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை பதிவு செய்தனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட விடியோ பதிவை மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தாக்கம் குறித்த குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் இளவரசி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அப்பன்ராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →