நாமக்கல்லில் டிச. 9-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச- 9ஆம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச- 9ஆம் தேதி நடைபெறுகிறது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுரையின்படி, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு நீதிமன்றம், ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்களில் வரும் டிச. 9-ஆம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே, நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிா்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.
Advertisement
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருக்கும்பட்சத்தில் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான என்.குணசேகரன் தெரிவித்துள்ளாா்.