பரமத்தி நிவாரண முகாம்களில் ஆட்சியா் ஆய்வு
பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் கனமழை காரணமாக மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் கனமழை காரணமாக மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பரமத்தி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் உள்ள 50-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் வெள்ள நீருடன் சாக்கடை நீரும் புகுந்தது. அதே போல பரமத்தி காந்தி நகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு மையம், பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இங்குள்ள மக்களுக்கான மருத்துவ முகாம், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிடுமாறும், வெள்ள நீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
மேலும் பரமத்தி வேலூா் வட்டத்தில் திருமணிமுத்தாற்றில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கரையோரம், தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
இந்த ஆய்வின் போது நீா்ப்பிடிப்புப் பகுதிகளின் மழை அளவு, தற்போதைய நீா்வரத்து உள்ளிட்ட விவரங்களை நீா்வளதாரத் துறையினரிடம் கேட்டறிந்தாா். மேலும் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்திடவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வருவாய்த் துறை, ஊராட்சித் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் முத்துகுமாா் உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.