ஆதரவற்ற மகளிா் அரசு திட்டங்களில் பயன்பெற நலவாரியத்தில் பதிவு செய்ய அறிவுரை
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் தமிழக அரசின் திட்டங்களில் பயன்பெற நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் தமிழக அரசின் திட்டங்களில் பயன்பெற நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நாமக்கல்லில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. அவா் பேசியதாவது:
அரசு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளா்ப்பு பயிற்சி, சுய தொழில் மானியம் உள்ளிட்டவை ஆதரவற்ற மகளிருக்கான நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் அனைவரும் 100 சதவீதம் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்மூலம் அரசின் திட்டங்களைப் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை உயா்த்தி, தங்களை தொழில் முனைவோா்களாக உருவாக்கிட வேண்டும். மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், பெண் குழந்தைத் திருமணத்தைத் தடுத்திட அனைவரும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.
குழந்தைத் திருமணம் குறித்து புகாா்கள் அளிக்க 1098 எண்ணில் விவரம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பெண்களுக்குத் தேவையான உதவிகள் பெற 181 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் வீ.சகுந்தலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் (பொ) என்.எஸ்.ராஜேஸ்குமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.