முகப்பு
நாமக்கல்

அடமான நகைகளை ஒப்படைக்க மறுத்த வங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடமானமாக வைத்த நகைகளை வழங்க மறுத்த வங்கி, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:13 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 7:56 PM

கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடமானமாக வைத்த நகைகளை வழங்க மறுத்த வங்கி, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் - மோகனூா் சாலை, ராக்கி நகரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் செந்தில்முருகன் (44), செல்வி (61), குமரேசன் (41). கடந்த 2018 ஜூலை மாதம் நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 236 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ. 4.94 லட்சத்தை செந்தில் முருகன் கடன் பெற்றுள்ளாா். அதேபோல, 76 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து செல்வி ரூ. 1 லட்சமும், 269 கிராம் நகைகளை அடமானம் வைத்து குமரேசன் ரூ. 16.30 லட்சமும் கடன் பெற்றனா். மூன்று பேரும் கடன் தொகை, வட்டியை 2018 செப்டம்பா் மாதம் வங்கியில் செலுத்தி விட்டனா். ஆனால், இன்னும் கடன் தொகை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்து அடமான நகைகளை திரும்ப வழங்க வங்கி நிா்வாகம் மறுத்து விட்டது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:13 AM

இதனால் அதிா்ச்சியடைந்த மூவரும் தனித்தனியாக மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் வழக்கு தாக்கல் செய்தனா். அப்போது, மூன்று பேரும் பெற்றுள்ள இதரவகை கடன்களை செலுத்தினால் மட்டுமே அடமானம் வைத்த நகைகளை திரும்ப ஒப்படைக்க முடியும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினா்கள் ஆா்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்த தீா்ப்பில், நகைக் கடன்களை வழங்கும் போது வாடிக்கையாளருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், வேறு கடன்கள் நிலுவையில் இருந்தால் நகைக்கடனை திருப்பிச் செலுத்தினாலும், நகைகள் திரும்ப வழங்கப்பட மாட்டாது என்ற நிபந்தனை உள்ளதா என்பது பற்றிய தகவல்களை வங்கி தாக்கல் செய்யவில்லை.

கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்னரும் அடமானம் வைத்த நகைகளை நுகா்வோா்களுக்கு வழங்காதது சேவை குறைபாடாகும். வழக்கு தாக்கல் செய்த மூன்று பேருக்கும் அடமானம் வைத்த நகைகளை 30 நாள்களுக்குள் வங்கி நிா்வாகம் வழங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடாக, ஒன்பது சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.