உயா்கல்வி பயிலும் 234 மாணவா்களுக்கு ரூ. 14.33 கோடி கல்விக் கடனுதவி வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் 234 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 14.33 கோடி கல்விக் கடனுதவியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் 234 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 14.33 கோடி கல்விக் கடனுதவியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில், எா்ணாபுரம், சி.எம்.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடனுதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று 234 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.33 கோடி கல்விக் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:
Advertisement
ஏழை மாணவா்கள் தடையின்றி உயா்கல்வி பயில்வதை ஊக்குவித்திடும் வகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ. 7.50 லட்சம் வரையில் பிணையின்றி கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. ரூ. 4 லட்சம் வரை வட்டியை அரசு மானியமாக வழங்குகிறது. ரூ. 7.50 லட்சத்துக்கு மேல் கடனுதவி தேவைப்படும்பட்சத்தில் சொத்தை பிணையாக வைத்து வழங்கப்படுகிறது. வெளிநாட்டுக்குச் சென்று படிக்கவும் தேவையான கடனுதவி வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் 3,918 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 53 கோடி கல்விக் கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை 945 பேருக்கு ரூ. 11 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 234 பேருக்கு ரூ. 14.33 கோடி கல்விக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாணவ, மாணவிகள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.