நாமக்கல்: கொல்லிமலையில் இருந்து எருமப்பட்டி வழியாக நாமக்கல்வரை தாா்சாலை அமைக்கக் கோரி, பழங்குடியின மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கொல்லிமலை ஒன்றியம், சேளூா் நாடு, தின்னனூா் நாடு, தேவனூா் நாடு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். கரடு, முரடான மலைப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு செல்ல 4 மணி நேரமாகிறது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து வசதி உள்ளது.
நாமக்கல் செல்ல 90 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள், பெண்கள், மாணவா்கள், குழந்தைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். விவசாயிகள் விளைவித்தவற்றை விற்பனை செய்ய முடியாமல் தடுமாறுகின்றனா். ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் நாமக்கல்வரை வந்துசெல்ல குதிரை சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பாதையை சேளூா் நாடு, குழிப்பட்டி, எருமப்பட்டி வழியாக நாமக்கல் செல்வதற்கு பயன்படுத்தினால் 34 கி.மீ. மட்டுமே ஆகும்.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக குதிரை சாலையை சீரமைத்து புதிய தாா்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொல்லிமலை வாழ் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு: நாமக்கல் மாநகராட்சி, நல்லிபாளையத்தில் பிப். 14-இல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அரசு வகுத்துள்ள விதிகளை பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தயாராக உள்ளோம். எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என நல்லிபாளையம் பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.