நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் மின்சார பம்ப்செட்டுக்கு கைப்பேசி மூலம் இயக்கப்படும் தானியங்கி கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் மின்சார பம்புசெட்டுக்கு கைப்பேசி மூலம் இயக்கப்படும் தானியங்கி பம்ப் கன்ட்ரோலா், ரிமோட் மோட்டாா் ஆபரேட்டா் மானியத்தில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இரவு நேரங்களிலும் மழைக்காலங்களிலும் வயல் வெளியில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறாா்கள். அவ்வாறு செல்லும்போது பாம்புகள், விஷப்பூச்சிகள் போன்றவற்றால் பிரச்னைகளில் சிக்க நேரிடுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்க கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் கட்டுப்படுத்தும் கருவி வேளாண் பொறியியல் துறை மூலமாக மானியத்தில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவிலிருந்து கைப்பேசி வாயிலாக இயக்கிடவும், நிறுத்திடவும் உதவுகிறது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 7,000, மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக
ரூ. 5,000 மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் நகல், விவசாயி என்பதற்கான வட்டாட்சியா் சான்று, மின் இணைப்பு சான்று நகல், 2 கடவுச்சீட்டு அளவு புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல் பக்க ஒளிம நகல் ஆகிய ஆவணங்களுடன் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், வசந்தபுரத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகம், திருச்செங்கோடு வரகூராம்பட்டி அலுவலகத்தை விவசாயிகள் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.