பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ. 1,700-க்கு ஏலம் போனதால் பூக்கள் பயிா் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 1,700-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 120-க்கும், அரளி கிலோ ரூ. 260-க்கும், ரோஜா கிலோ ரூ. 220-க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 1,300-க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 1,000-க்கும், செவ்வந்தி ரூ. 220-க்கும், கனகாம்பரம் ரூ. 1,000-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 360-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 900-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 800-க்கும் ஏலம் போயின.
பூக்கள் வரத்து குறைவாலும், அதிக அளவில் முகூா்த்தம் இருப்பதாலும் பூக்களின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பூக்கள் விலை உயா்ந்ததால், பூக்கள் பயிா் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.