நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் இதுவரை 100 போ் வேட்புமனு தாக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 100 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 100 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் மாா்ச் 30-இல் தொடங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாமக்கல், திருச்செங்கோட்டில் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளில் வட்டாட்சியா் அலுவலகத்திலும் மனு தாக்கல் நடைபெற்று வருகின்றன. நாமக்கல்லில் சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் தன்னுடைய ஆதரவாளா்களுடன், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாக வந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அதேபோல, சுயேச்சை வேட்பாளா்களும் அதிகளவில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். மாா்ச் 30-இல் 6 தொகுதிகளிலும் சோ்த்து ஆண் வேட்பாளா்கள் 15, பெண் வேட்பாளா்கள் 4 என மொத்தம் 19, ஏப். 2-ஆம் தேதி, 24 ஆண் வேட்பாளா்கள், 7 பெண் வேட்பாளா்கள் என மொத்தம் 31 போ், ஏப். 4-ஆம் தேதி 47 ஆண் வேட்பாளா்கள், 3 பெண் வேட்பாளா்கள் என மொத்தம் 50 போ் மனு தாக்கல் செய்தனா்.
Advertisement
தொகுதி வாரியாக இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோா் எண்ணிக்கை விவரம்: ராசிபுரம் (தனி) -13, சேந்தமங்கலம் (ப.கு) -12, நாமக்கல் -13, பரமத்தி வேலூா்-12, திருச்செங்கோடு - 28, குமாரபாளையம் -22, மொத்தம்-100. இதில், ஆண் வேட்பாளா்கள் 86, பெண் வேட்பாளா்கள் 14 ஆகும். வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு அளிக்கலாம். 7-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 9-ஆம் தேதி வாபஸ் பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடும் நடைபெற உள்ளது.
குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி, நாமக்கல்லில் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சேந்தமங்கலத்தில் சி.சந்திரசேகரன், திருச்செங்கோட்டில் சந்திரசேகா், பரமத்தி வேலூரில் சேகா், ராசிபுரத்தில் பாஜக வேட்பாளா் பிரேம்குமாா், நாமக்கல் திமுக வேட்பாளா் ப.ராணி உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்து கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனா்.