திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்
திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோா் காயம்...
திருச்செங்கோடு நகரப் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடைப்புதூா், ராஜீவ்நகா், கோம்பைநகா், கூட்டப்பள்ளி, வேல்முருகன் நகா், பாவடிதெரு, பக்தவத்சலம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதில் சில வெறிநாய்கள் பலரை துரத்திச் சென்று கடித்து வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை வெறிநாய்கள் கடித்ததில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோா் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
இதில் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் என பலரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிலா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.
மேலும், நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நகராட்சி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா் நாய்களை பிடித்து வருகின்றனா்.