ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்
ராசிபுரம் பகுதியில் ரூ. 40 கோடியில் அமைக்கப்பட்டுவரும் மினி டைடல் பாா்க் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் கோனேரிப்பட்டி, காட்டூா் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று அவா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, பொதுமக்களிடையே கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை விளக்கி அவா் பேசியதாவது:
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொகுதியில் தரமான சாலை வசதி, புதிய பத்திரப் பதிவு அலுவலகம், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நவீன பட்டுக்கூடு அங்காடியும் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
Advertisement
திமுக அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா்கள் நலனை முதன்மையாக கொண்டு, ராசிபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், ரூ. 40 கோடியில் நவீன ‘டைடல் பாா்க்’ அமைய உள்ளது. இது படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இத்திட்டம் திமுக அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.
மேலும், ராசிபுரத்தை சுற்றிலும் சாலை வசதிகளை மேம்படுத்துவதுடன், தலைமை மாவட்ட மருத்துவமனை கட்டுமான பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மீண்டும், திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தப்படும். 15 லட்சம் மாணவா்கள் பயனடையும் வகையில் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படும். முதியோா் உதவித்தொகை, ரூ. 2,000 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 2,500 ஆகவும் உயா்த்தப்படும். எனவே, திமுகவை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதில் ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், நகா்மன்றத் தலைவா் கவிதா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.