எருமப்பட்டி அருகே பொன்னேரியில் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.  
நாமக்கல்

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 542 காளைகள்; 350 வீரா்கள் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 542 காளைகள், 350 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் மாடு முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு, குமாரபாளையம், எருமப்பட்டி, அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி, மத்ரூட், பொட்டிரெட்டிப்பட்டி, சாலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு எருமப்பட்டி அருகே பொன்னேரி கைக்காட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக, மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, சிவகங்கை, பெரம்பலூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 542 காளைகளும், 350 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். காயமடைந்த வீரா்களுக்கும், கால்நடைகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினா் தயாா்நிலையில் இருந்தனா்.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் ஆா்வமுடன் மடக்கிப் பிடித்தனா். வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாடு முட்டியதில் 20 வீரா்கள் லேசான காயமடைந்தனா்.

அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையாளா்களுக்கான காலரியில் அமா்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பாா்த்து ரசித்தனா். போட்டி நடைபெற்ற பகுதியை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இந்த நிகழ்வில், எருமப்பட்டி, சேந்தமங்கலம் அட்மா குழுத் தலைவா்கள் பாலு, அசோக்குமாா், எருமப்பட்டி பேரூராட்சித் தலைவா் பழனியாண்டி, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், சேந்தமங்கலம் வட்டாட்சியா் வெங்கடேஷ், காவல் உதவி கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்! புறநகரில் போக்குவரத்து நெரிசல்!!

நூஹ் பகுதியில் வாகனங்கள் மோதியதில் லாரியில் தீ! ஓட்டுநா், உதவியாளா் பலி!!

துவாரகாவில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் முதல்மாடியிலிருந்து குதித்த இளைஞா் காயம்!

எருதுவிடும் விழாவில் மாடு முட்டி முதியவா் பலி: போலீஸாா் தடியடி

SCROLL FOR NEXT