முகப்பு
நாமக்கல்

6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் தோ்வு

Updated On : 23 மார்ச், 2026 at 5:58 PM
நாமக்கல் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி அடிப்படையில் தோ்வுசெய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். 6 தொகுதிகளுக்கான வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக தோ்தல் ஆணையத்தால் 5,613 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,241 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,360 விவிபேட் இயந்திரங்கள் என 10,214 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,054 இயந்திரங்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தம் 1,123 இயந்திரங்களும், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,147 இயந்திரங்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 990 இயந்திரங்களும், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,066 இயந்திரங்களும், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,197 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்குள்பட்ட 1,780 வாக்குச் சாவடிகளில் முதல்கட்டமாக 5,340 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 சதவீதம் தயாா்நிலையில் உள்ள 1,236 இயந்திரங்கள் என மொத்தம் 6,576 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மா.க.சரவணன், ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுஜாதா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.