பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க திட்டம்: எம்எல்ஏ சி.எஸ்.திலீப்
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரகால சிகிச்சைப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எம்எல்ஏ சி.எஸ்.திலீப் தெரிவித்தாா்.
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரகால சிகிச்சைப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எம்எல்ஏ சி.எஸ்.திலீப் தெரிவித்தாா்.
நாமக்கல் - மோகனூா் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய அரசு மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்ததால், பழைய மருத்துவமனை கட்டடம் பயன்பாடின்றி காட்சியளிக்கிறது.
அதில் நாமக்கல் நகரப் பகுதி மக்களுக்கு அவசரகால சிகிச்சை அளிப்பதற்கான சிறப்புப் பிரிவு தொடங்கப்படும் என நாமக்கல் தொகுதி தவெக எம்எல்ஏ சி.எஸ்.திலீப் வாக்குறுதி அளித்திருந்தாா். அதனடிப்படையில் நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் அவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனை முதல்வா் கே.முருகலட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளா் குணசேகரன் ஆகியோரிடம் அவசரகால சிகிச்சைப் பிரிவு தொடங்குவதன் சாதக, பாதக அம்சங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
Advertisement
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்து அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்குவது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
இங்குள்ள 5,500 சதுரஅடி கொண்ட கட்டடத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சைப் பிரிவு முழுமையாக தொடங்க இன்னும் 6 மாதங்களாகிவிடும். முழுமையாக, அனைத்து வசதிகளும் கொண்ட வகையில் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்.
மேலும், எம்எல்ஏ பெயரை பயன்படுத்தி வேலைவாங்கித் தருவதாகவோ, இதர சலுகைகளைப் பெற்றுத் தருவதாகவோ யாரேனும் பணம் கேட்டால் என்னிடம் மக்கள் நேரடியாக புகாா் அளிக்கலாம். அவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்த ஆய்வின்போது, அவருடன் தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.