தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு சேலத்துக்கு புதன்கிழமை (அக்டோபர் 17) வர உள்ளது. இவர்கள் திட்டப் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் பி.ஜி.நாராயணன் தலைமையிலான சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு சேலத்துக்கு புதன்கிழமை இரவு வருகை தர உள்ளது.
இக் குழுவில் பி.ஜி.நாராயணன், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொது கணக்குக் குழுத் தலைவர் ராமச்சந்திரன், பொது நிறுனங்கள் குழுத் தலைவர் வி.சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, டி.ராமச்சந்திரன், செ.காமராஜ், டாக்டர் க.கிருஷ்ணசாமி, ஆர்.சாமி, ஆர்.சீனிவாசன், டி.செங்குட்டுவன், அ.பாப்பா சுந்தரம், தங்க தமிழ்செல்வன், கே.பாலபாரதி, ப.தன்சிங், கு.நல்லதம்பி, ஜே.ஜி.பிரின்ஸ், வ.நீலகண்டன், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சட்டப் பேரவைச் செயலர், துணைச் செயலர், சார்புச் செயலர் என மொத்தம் 33 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சேலம் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் இக்குழுவினர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வேளாண்மை, உயர் கல்வி, ஆதிதிராவிடர் நலன், கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள மதிப்பீடுகள் தொடர்பான திட்டப் பணிகள், நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான துறை அலுவலர்களுடன் இக்குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.