கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் திடீர் மாற்றம்
சேலத்தில் வடமாநில வியாபாரியை ரௌடிகள் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அதிரடியாக மாற்றப்பட்டார்.
சேலத்தில் வடமாநில வியாபாரியை ரௌடிகள் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அதிரடியாக மாற்றப்பட்டார்.
சேலம் கிச்சிப்பாளையம், தாதுபாய்குட்டை பகுதிகளில் வணிக நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளிடம், அப்பகுதியைச் சேர்ந்த ரௌடிகள் சிலர் மாமூல் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தாதுபாய்குட்டை பகுதியில் தேநீர்க் கடை நடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவரை, ரௌடிகள் சிலர் மாமூல் கேட்டு தாக்கினர். இதுதொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தநிலையில் மாநகரக் காவல் ஆணையர் சங்கர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநகரப் பகுதியில் பொது அமைதிக்கும், வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சரவணன், கொடுங்குற்றப் பிரிவுக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நாகராஜன், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல கொடுங்குற்றப் பிரிவில் பணியாற்றி வந்த ஆய்வாளர் பால்பாண்டி, அம்மாப் பேட்டை காவல் நிலையத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாநகர காவல்ஆணையர் சங்கர் பிறப்பித்துள்ளார்.