ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்தூர் வட்டார ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் முன்னேற்ற நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ள அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.துரைசாமி கூறியது:
மரவள்ளிக் கிழங்கை தமிழகத்தின் 22 மாவட்டங்களில், 25 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் கிணற்று நீர்ப் பாசனம் மூலமும், மலைவாழ் மக்கள் மானாவாரியாகவும் பயிர் செய்து வருகின்றனர்.
இந்த மரவள்ளிக் கிழங்கை சேகோ தொழிற்சாலைகளில் அரவை செய்து ஸ்டார்ச், ஜவ்வரிசி தயாரித்து சேலம் சேகோ சர்வ் மூலம் விற்பனை செய்து வருகிறோம். ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசியைத் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உணவுப் பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதன் உற்பத்திக்கு மத்திய அரசு ஸ்டார்ச் (மாவுப் பொருளுக்கு) 12 சதவீதமும், ஜவ்வரிசிக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளனர்.
தமிழக அரச சேகோ சர்வ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் விற்பனைக்கு வரிவிலக்கு அளித்து, தற்போது ரூ.500 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யும் பெரிய தொழில் கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, சேகோ சர்வுக்கு அனுப்பி விற்கப்படும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் பொருளுக்கு மத்திய அரசு விதிக்கும் ஜிஎஸ்டி வரியால் சேகோ சர்வ் வியாபாரம் பாதித்து வரிச் சுமை விவசாயிகளை பாதிக்கும்.
எனவே, தமிழக முதல்வர், சங்கத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் பொருளுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்கி விலக்களித்து சேகோ தொழிலையும், மலைவாழ் விவசாயிகளையும் தொழில் சார்ந்த தொழிலாளர்களையும் வாழவைக்க வேண்டும் என்றார்.