எடப்பாடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கன்னிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு
(65) விவசாயி. இவருக்கு வள்ளி (48) என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தைக் குடித்து அய்யாவு தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து பூலாம்பட்டி காவல் நிலைத்தில் அவர் மனைவி வள்ளி புகார் அளித்துள்ளார். அதில், பூலாம்பட்டியை அடுத்த மோளப்பாறை பகுதியில் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் ஒரு பகுதியை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கிரையம் செய்ததாகவும், அவர்கள் தனது கணவர் அய்யாவுவை ஏமாற்றி பத்திரப் பதிவு செய்ததாகவும், இதனால் மனமுடைந்த அய்யாவு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். வள்ளியின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.