முகப்பு
சேலம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு வறட்சியால் கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது: சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர்

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது என்று, தமிழக அரசின் சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் எம்.செந்தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது என்று, தமிழக அரசின் சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் எம்.செந்தமிழ்செல்வன் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கரும்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மேம்பாட்டு அலுவலர்களின் 48 ஆவது கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக அரசின் சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் எம்.செந்தமிழ்செல்வன் பேசியது:
கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகப் பெரிய செல்வந்தர்களாக மாறி உள்ளனர்.  கரும்பில் இருந்து வெல்லம்,  நாட்டு சர்க்கரை ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால்,  இன்றையச் சூழலில் நிச்சயமற்ற நிலையில் கரும்பு உற்பத்தி உள்ளது.  சர்க்கரை விலையில் ஏற்ற, இறக்கம்,  ஆலை போராட்டம் உள்ளிட்டவை காரணிகளாக உள்ளன.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 என்ற அளவுக்கு தரக்கூடிய அளவுக்கு மின் உற்பத்தி உள்ளிட்ட உப தொழில்களில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.
கடந்த  2016 -17 ஆம் ஆண்டு 119 லட்சம் டன் கரும்பு அரவைக்கு வந்தது.  இதன் மூலம் 10.62 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.  ஆனால்,  கடந்த ஆண்டு நிலவிய வறட்சியால்,  நிகழாண்டு கரும்பு உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளது.
எனவே,  இந்தாண்டு அரவைக்கு 79 லட்சம் டன் கரும்பு மட்டுமே வரும் என எதிர்பார்க்கிறோம்.  இதன் மூலம் 7.14 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை 5 கூட்டுறவு ஆலைகள் முழுமையாக வழங்கி உள்ளன.  மீதம் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும்,  தனியார் சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.  கரும்பு வெட்டுக் கூலியால் விவசாயிகளுக்கு செலவினம் அதிகரித்து வருவதால்,  இனிவரும் காலங்களில் இயந்திரங்களைக் கொண்டு கரும்பு வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  இதனால் செலவினம் குறையும்.  தமிழகத்தில் போதிய சர்க்கரை இருப்பு உள்ளது.  கரும்பு உற்பத்தி அதிகம் என்றாலும்,  சர்க்கரை கட்டுமானம் மாநிலத்தில் குறைவாக உள்ளது என்றார்.
கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலைய இயக்குநர் பக்ஷிராம் கூறியது:
இந்தாண்டு கரும்பு  உற்பத்தியைப் பெருக்க 20 புதிய ரக கரும்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.  கடந்த ஆண்டு கரும்பு விவசாயிகள் மழையின்மை காரணமாக பெரும் பிரச்னைகளைச் சந்தித்தனர்.  கடந்த 20 ஆண்டுகளாக பழைய கரும்பு ரகங்கள் மட்டுமே விளைவிக்கப்பட்டு வந்தன.  தற்போது, நீர் நிர்வாகம் மற்றும் சொட்டுநீர்ப் பாசனம் மூலமும், புதிய ரகங்களைக் கொண்டு கரும்பு உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
புதுச்சேரி அரசின் வேளாண் துறை இயக்குநரும்,  சர்க்கரைத் துறை ஆணையருமான ஏ.ராமமூர்த்தி,  கள்ளக்குறிச்சி  2 கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் ஏ.கே.சிவமலர்,   தலைவர் எஸ்.வடிவேல்,  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மரபணுவியல் மற்றும் செடி வளர்ப்பு மையத்தின் இயக்குநர் கே.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →