சேலம் கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பெருந்தமனி பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திருப்பத்தூரை சேர்ந்த திருஞானம் (45), கடந்த அக். 26-ஆம் தேதி மார்பு வலியால் சேலத்தில் உள்ள கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு சிடி ஸ்கேன் எக்கோகார்டியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு பெருந்தமனி பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியப் பாகங்களுக்கு ரத்தம் கொண்டு செல்வது பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதன்பேரில், உடனே அவருக்கு இதய சிகிச்சை மருத்துவர் பி.கே.ஹரிகுமார் தலைமையில் நாகூர் மீரான், ராஜா ராம் பிரசாத் ஆகிய மருத்துவர்கள் சுமார் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பெருந்தமனியில் பகுதி அளவு ஏற்பட்ட பாதிப்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி உடல் நலம் தேறியதையடுத்து, அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுபோன்ற சிக்கலான ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை செலவாகும் என்றும், நோயாளி ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் உபகரண சிகிச்சைக்கு மட்டுமே அவரிடம் கட்டணம் பெறப்பட்டு, மீதமுள்ள செலவை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது என மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கே.அர்த்தநாரி தெரிவித்தார்.