நிலத் தகராறில் முதிவரை இருவர் திங்கள்கிழமை கட்டையால் அடித்துக் கொலை செய்ததையடுத்து, கொலையாளிகளை கைது செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட பறவைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூமாலை படையாச்சி மகன் பச்சமுத்து (60), விவசாயி. இவரது மனைவி சுந்தரி (55). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
பச்சமுத்துவின் பக்கத்துத் தோட்டக்காரர்கள் ராமசாமி மகன்கள் கூத்தன் (45), அவரது சகோதரர் சமரு (42). இவர்களுக்கும், பச்சமுத்துவக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந் நிலையில், திங்கள்கிழமை இரவு இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த சமரு, அருகில் இருந்த கட்டையால் பச்சமுத்துவை தாக்கினராம். அதில் பலத்த காயமடைந்த பச்சமுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், பச்சமுத்துவின் சடலத்தை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஏத்தாப்பூர் காவல்ஆய்வாளர் சரவணக்குமார் வழக்குப் பதிவு செய்து, சகோதரர்கள் கூத்தன், சமரு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார்.