சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாகனப் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி வி.என்.பாளையம், பழைய பேருந்து நிலையம் வழியாக பயணியர் விடுதி சாலையை அடைந்தது. பேரணியில் முடிவில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமை வகித்தார்.
சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனபால், விஸ்வநாதன், வாகனப் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் பொது நல அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.