மகுடஞ்சாவடி அருகே லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேலனூர் பகுதியைச் சேர்ந்த பூச்சி மகன் காளியப்பன் (27). இவர் கோவையில் உள்ள தனியார் உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் லட்சுமணன் மகன் கோவிந்தராஜ் (27) கோவையில் தங்கி போட்டித் தேர்வுகளுக்கு பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் கோவைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
மகுடஞ்சாவடி அருகேயுள்ள அ.தாழையூர் குறுக்கு வளைவு பகுதியில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக திரும்பியுள்ளது. அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரி மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காளியப்பன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த கோவிந்தராஜ் தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.