புனித செல்வநாயகி ஆலயத்தில் மத நல்லிணக்க மகிமை விழா
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு புனித செல்வநாயகி ஆலயத்தில் பாஸ்கா எனப்படும் மகிமை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்ப்பவனியுடன் நிறைவடைந்தது.
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு புனித செல்வநாயகி ஆலயத்தில் பாஸ்கா எனப்படும் மகிமை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்ப்பவனியுடன் நிறைவடைந்தது.
இப்பாரம்பரிய விழா, கடந்த 364 ஆண்டுகளாக கொண்டாப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள், இந்துக்கள் இணைந்து ஒற்றுமையுடன் இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர். கடந்த மார்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்
விழா தொடங்கியது. முன்னதாக புனித செல்வநாயகி ஆலயத்திலிருந்து சென்ற கிறிஸ்தவ பெரியவர்கள், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத் தலைவர்களுக்கு வெற்றிலை, பழம் கொடுத்து பாஸ்கா விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த கொடியேற்று விழாவில் கலந்துகொண்ட இந்து சமூக ஊர்தலைவர்களை, பொறுப்பு பங்குத்தந்தை ஜேக்கப் மற்றும் உதவிப் பங்குத்தந்தை ராபின்சன் ஆகியோர் வரவேற்றனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய பாஸ்கா விழா நாள்களில் தொடர்திருப்பலிகள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு மறைமாவட்டத் தலைமைக் குரு டி.பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் தொடக்க திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, 20 மேடைகளில்
300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு கொண்ட, இயேசுவின் வாழ்கையைசித்திரிக்கும் உலக மீட்பர் என்னும் ஒலி, ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை உயிர்ப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து அதிகாலை புனித செல்வநாயகி தேர்ப்பவனி நடைபெற்றது. சேலம் மறைமாவட்ட
ஆயர் செ.சிங்கராயன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு
மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.