கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
ஒமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான செம்பு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்த கிராம மக்கள், அதற்காக புதன்கிழமை சுற்று பொங்கல் வைக்க தண்டோரா செய்தனர். ஆனால், கோயிலைச் சுற்றி ஆக்கிரமித்துள்ள சிலர் தங்களுடைய கட்டடங்கள் அகற்றப்படும் என்பதால், தண்டோரா போட எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.
இதனால் திங்கள்கிழமை மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்ய கிராம மக்கள் வந்தனர். ஆனால், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நேர்முக உதவியாளர் என யாரும் இல்லாததால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வருவாய்த் துறை அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று கோட்டாட்சியரின் உதவியாளர் செந்தில்குமாரிடம் மனு அளித்து சென்றனர்.