வாழப்பாடியை அடுத்த தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாழப்பாடி அன்னை அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளையுடன் இணைந்து தாய்ப்பால் வார விழா, கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நல விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தும்பல் மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வாழப்பாடி அன்னை அரிமா சங்க செயலர் கலைவாணி பிரபாகரன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
தும்பல் மகப்பேறு மருத்துவர்கள் கலா வில்வநாதன், ஷபானா, ஹனிப்ரியா ஆகியோர் பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர். வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜவஹர், பெரியார்மன்னன், அரிமா சங்க நிர்வாகிகள் வெற்றிச்செல்வன், பிரபாகரன் ஆகியோர், தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த கையேடு மற்றும் பரிசுப் பொருள்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கினர்.