ஆத்தூர் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரை தெற்கில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் யாகத்துடன் சிறப்பு அபிஷேக, அலங்காரமுமம் அதைத் தொடர்ந்து ஆராதனையும் நடைபெற்றன. நந்தி மீது உற்சவர் கோயில் வலம் வந்ததை அடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் ஆலயம், நரசிங்கபுரம் சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ விழா நடைபெற்றது.
தம்மம்பட்டியில்....
தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் பிரதோஷவிழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், தேன், அரிசி மாவு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நந்திக்கு, அருகம்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. அதன்பின், நந்திக்கு வெள்ளிக்கவசம் அணிந்த பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனர். இதேபோல் கெங்கவல்லி,வீரகனூர் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.