தம்மம்பட்டி பேருந்துநிலைய மேற்கூரை அண்மையில் இடிந்து விழுந்ததையடுத்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
தம்மம்பட்டியில் கடந்த 1989-இல் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் மேற்கூரை நவ.27-ஆம் தேதி பெயர்ந்து விழுந்தது.
அப்போதைய உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி நேரில் ஆய்வு செய்து,மேற்கூரை இடிந்த பகுதியை சீரமைக்க திட்டமதிப்பீடு செய்துஅறிக்கையை உதவி இயக்குநருக்கு வழங்கினார். இதையடுத்து சில நாள்களில் பலவீனமாக இருக்கும் பேருந்துநிலைய மேற்கூரைப் பகுதியை இடிக்கும் பணி இரவுநேரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து பேரூராட்சி இயக்குநரக கண்காணிப்பு செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது, பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் முருகன், உதவி செயற்பொறியாளர் (சேலம்) ஜெகதீஸ்வரி மற்றும், பொறியாளர் கணேசன், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். பேருந்து நிலைய ஆக்கிரமிப்பை அகற்ற பேரூராட்சி உதவி இயக்குநர் முருகன் உத்தரவிட்டார். இதுகுறித்து தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிச்சாமி கூறியது:
தம்மம்பட்டி பேருந்துநிலைய கூரை இடிந்துவிழுந்ததையடுத்து,அதற்கான சீரமைப்புப்பணிகள் துரிதமாக நடந்துவருகிறது.பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உதவி இயக்குநர் முருகன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வீரகனூர் பேருந்து நிலையப் பகுதியிலும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.