சிதைந்து கிடக்கும் பெரியகிருஷ்ணாபுரம் ஏரி புதுப்பிக்கப்படுமா? காத்திருக்கும் விவசாயிகள்
வாழப்பாடி அருகே தண்ணீரை தேக்கி வைக்க முடியாத அளவுக்கு சிதைந்து போன பெரியகிருஷ்ணாபுரம் ஏரியை புதுப்பிக்க, மாவட்ட
வாழப்பாடி அருகே தண்ணீரை தேக்கி வைக்க முடியாத அளவுக்கு சிதைந்து போன பெரியகிருஷ்ணாபுரம் ஏரியை புதுப்பிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த 3 வது கி.மீ. தூரத்தில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், பெரியகிருஷ்ணாபுரம் கிராமம் அமைந்துள்ளது. அந்தக் கிராமத்தில், முயல்கரடு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீரைச் சேமித்து வைக்க 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 30 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைக்கப்பட்டது. அந்த ஏரியால் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வந்தன.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்திய போது, பெரியகிருஷ்ணாபுரம் ஏரியின் தென்புற கரை முற்றிலும் அகற்றப்பட்டது. அதுமட்டுமின்றி சாலை அமைக்கும் பணிக்காக ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து மண் வெட்டி எடுக்கப்பட்டது. அதனால் கரையின்றி குண்டும் குழியுமான ஏரி, தண்ணீரை தேக்கி வைக்க முடியாத அளவுக்கு சிதைந்து போனது.
அதுமட்டுமின்றி, ஏரிக்கு மழைநீர் வழிந்தோடி வரும் முயல்கரடு வருகால் வாய்க்கால் மற்றும் ஏரியில் நீர் நிரம்பி வழிந்தால் தண்ணீர் வெளியேற்ற பயன்படும் மறுகால் வாய்க்கால்களும், மதகுகளும், பாசன வாய்க்கால்களும் பராமரிப்பின்றி இருந்த சுவடே தெரியாத அளவிற்கு மறைந்து போயின. அதனால், கடந்த 10 ஆண்டுகளாக பலத்த மழை பெய்தாலும் மழைநீரை ஏரியில் சேமித்து வைத்து பயன்படுத்த வழியின்றி, அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, சிதைந்த போன பழமையான ஏரிக்கு, கரை, மதகுகள் மற்றும் வாய்க்கால் அமைத்தும், மேடு பள்ளமாக நீர்ப்பிடிப்பு பகுதியை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பெரியகிருஷ்ணாபுரம் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துலிங்கம் கூறியதாவது:
பழமையான பெரியகிருஷ்ணாபுரம் ஏரி, கடந்த 15 ஆண்டுக்கு முன் வரை, ஆண்டுதோறும் மழைக் காலங்களில் நிரம்பி வந்தது. வறட்சி, வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் நீர்வரத்தின்றி வறண்டு போனது. இந்நிலையில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது ஏரியின் தென்கரை அகற்றப்பட்டது.
பல ஆண்டுகள் கடந்தும் அந்த கரையை அமைக்கவும், மதகுகள் மற்றும் வாய்க்கால்களை புதுப்பிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், பலத்த மழை பெய்தாலும் மழைநீரை ஏரியில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிதைந்துபோன ஏரியை முழுமையாக புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.