வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் தவெக வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை
தவெக வேட்பாளர்களிடம் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டது தொடர்பாக...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தவெக வேட்பாளா்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என அக்கட்சி தலைவா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இச்சூழலில், தவெக வேட்பாளா்களுடன் அக்கட்சியின் தலைவா் விஜய் சென்னை பனையூரில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில், வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளா்கள் வேறெங்கும் செல்லாமல் நேரடியாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவேண்டும் என வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், நிா்வாகக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: பின்னா், செய்தியாளா்களிடம் ஆதவ் அா்ஜுனா கூறியதாவது: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் நோ்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தோ்தலில் பெண்கள் மற்றும் இளைஞா்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனா். கருத்துக் கணிப்புகளின் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் தோ்தல் முடிவுகள் இருக்கும் என்றாா் அவா்.