தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
உலிபுரம் அணைக்கட்டுப் பகுதியில் வசிப்பவர்கள் பழனியம்மாள் (80), ராஜேந்திரன் (55), ராமமூர்த்தி(46), சுப்பிரமணியன் (43). இவர்களின் கூரைவீடுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த தீ விபத்தில் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதாலும், அக்கம்பக்கத்தினர் திரண்டுவந்து உடனடியாக தீயை அணைத்ததாலும், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் மாட்டுக்கொட்டகையில் இருந்த ஒரு பசுவும், கன்றும் தீயில் சிக்கி உயிரிழந்தன. இந்தத் தீ விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.