முகப்பு
சேலம்

ஆயுதப்படை காவலர் உள்ளிட்டோரிடம் இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி பறிப்பு: போலீஸார் தீவிர விசாரணை

சேலம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆயுதப்படை  காவலர் உள்ளிட்டோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர

Updated On : 8 அக்டோபர் 2018, 9:15 am IST
பகிர்:

சேலம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆயுதப்படை  காவலர் உள்ளிட்டோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற கும்பலை  போலீஸார் தேடி வருகின்றனர்.
ஓமலூரைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு. சேலம் மாநகரக் காவல் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு  12 மணியளவில் நீதிபதி வீட்டுக்கு பாதுகாப்புப் பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
கருப்பூர் அருகில்  உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த 7 பேர் கும்பல் திடீரென செல்லக்கண்ணுவை வழிமறித்து நிறுத்தியது. அதன் பின்னர்  ஏழு பேரும்  மறைத்து வைத்திருந்த கத்தியைக் காண்பித்து செல்லக்கண்ணு ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு, அவரை விரட்டி விட்டனர்.
பின்னர்  அந்தக்  கும்பல் அந்த வழியாக வந்த கார் ஒன்றையும் நிறுத்தி காரில் இருந்தவர்களை மிரட்டி  செல்லிடப்பேசி, கை கடிகாரம் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது. இதனிடையே இருசக்கர வாகனப் பறிப்பு சம்பவம் குறித்து செல்லக்கண்ணு, மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், சூரமங்கலம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் மாநகரக் காவல் ஆணையர் கே.சங்கர் தனிப்படை அமைத்து வழிப்பறியில் தொடர்புடைய 7 பேர் கும்பலைத் தேடி பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கொண்ட காவலர் குழு விசாரித்து வருகிறது. இதனிடையே ஆயுதப்படை காவலரிடம் இருசக்கர வாகனத்தைப் பறித்து மிரட்டி அனுப்பிய  சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதப்படை காவலர் செல்லக்கண்ணுவிடம் வாகனம் பறித்த இடம் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
இந்த வழியாக இரவு பகல் என எந்நேரமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் செல்லக்கண்ணுவை கத்தியைக் காட்டி  மிரட்டி வாகனத்தை பறித்துச் சென்ற அந்த ஏழு பேர் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 
மேலும், மாமங்கம் தகவல் தொழில்நுட்ப பூங்கா முதல் சேலம் உருக்காலை சிக்னல் வரையிலான பகுதியில் போதிய மின் விளக்கு இல்லாததால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் சாதகமாக்கி கொண்டுள்ளனர். எனவே அப்பகுதியில் போதிய மின்விளக்கு அமைத்திட வேண்டும். மேலும், வழிப்பறி கும்பலை உடனே கைது செய்ய  வேண்டும் என
அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.