பிரதமர் நரேந்திர மோடியை சமூக ஊடகங்களில் அவதூறாகப் பேசியதாக, வாழப்பாடியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீது, பா.ஜ.க., சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரஹ்மான் (32). தி.மு.க. பிரமுகரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, மேல்நிலை குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பா.ஜ.க. மாநில நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியோரை அவதூறாகப் பேசி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாழப்பாடி நகர பா.ஜ.க. தலைவர் ராஜபிரபு, கலீல் ரஹ்மான் மீது புகார் செய்துள்ளார். இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.