ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வழியாக செல்லும் சரபங்கா நதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் நிகழ்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்தனர்.
ஓமலூர் அருகே சேர்வராயன் மலைச்சரிவில் டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் சரபங்கா நதி உற்பத்தியாகிறது. இந்த நதி காடையாம்பட்டி வழியாக வந்து ஓமலூரில் ஒன்றாக இணைந்து ஒரே நதியாக தாரமங்கலம், எடப்பாடி வழியாக சென்று பூலாம்பட்டி காவிரியாற்றில் கலக்கிறது. ஆனால், தற்போது மழை பொய்த்ததால் சரபங்கா நதி வறண்டு கிடக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி மணல் மற்றும் செம்மண் கடத்தல் நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓமலூர் அருகே தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி,தாரமங்கலம் அருகேயுள்ள தெசவிளக்கு,தொப்பம்பட்டி,சின்னப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்தொடர்ந்து 24மணி நேரமும் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் மணல் மற்றும் செம்மண் கடத்தப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தடுப்பணை பகுதியையொட்டி அனுமதியின்றி ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டும் அதிகரித்துள்ளது. மணல் மற்றும் செம்மண் கடத்தலைச் தடுக்க சேலம் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.