வாழப்பாடி-பேளூர் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அகற்றப்பட்ட வேகத் தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை.
இதனால், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
வாழப்பாடியில் இருந்து பேளூர் வரையிலான ஏறக்குறைய 5 கி.மீ தூரத்துக்கு சாலை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளதால் இச் சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் குறைவதில்லை.
இச் சாலையில் அண்ணா நகர், பாட்டப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களில் வேகத் தடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வருகையொட்டி வேகத்தடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. எனவே, அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டுமென வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.