தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களை வாக்களிக்க வருமாறு வருவாய்த் துறை அதிகாரிகள் அழைப்பிதழ் கொடுத்து அழைத்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களின் கடமை குறித்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த தேர்தலில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப் பதிவான இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேட்டூர் நகராட்சியில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகி உள்ள காவேரி நகர், தூக்கனாம்பட்டி, சுப்ராயன் நகர், மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூர் வருவாய்க் கோட்டாட்சியர் லலிதா தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு அழைப்பிதழை வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்து வாக்களிக்க தவறாது வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
வாக்காளர்கள் அழைப்பிதழை பெற்றுக் கொண்டு வாக்களிக்க வருவதாக உறுதியளித்தனர்.