எட்டு வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்கக் கோரி சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் கைகளில் விவசாய பயிர்களான நெல், கரும்பு ஏந்தி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் பேரரசு கட்சி தலைவரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தை முன்னிட்டு, காவல்துறையினர் 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் வஜ்ரா வாகனங்களுடன் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.