பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி அருகே விசைப்படகின் மூலம் பயணிகள் அண்டை மாவட்டத்துக்கு சென்று வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்திடும் நோக்கில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டப் பகுதிக்கு செல்வோா், உரிய இ-பாஸ் அனுமதி பெற்று செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்துக்கு செல்வதற்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான பயணிகள், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரி கதவணை நீா்த்தேக்கத்தில் இயக்கப்படும் விசைப்படகின் மூலம் சென்று வருகின்றனா்.
இப்பகுதியில் சோதனைச் சாவடிகள் ஏதும் இல்லாத நிலையில், பயணிகள் எளிதாக அண்டை மாவட்டத்துக்கு சென்று வருகின்றனா். இதனால் நோய்த்தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.