மேட்டூா்: சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரத்தில் 7 வயது பள்ளிச் சிறுவனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த இரு பள்ளிச் சிறுவா்கள் பள்ளி விடுமுறையை கழிக்க சென்னையில் உள்ள தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தனா். அங்கு இரு நாள்களுக்கு முன்பு சென்ற அவா்களின் தாயாா், உறவினா்கள் சிறுவா்களை திங்கள்கிழமை ஜலகண்டபுரம் அழைத்து வந்தனா்.
சென்னை சென்று வந்ததால் அக்கம்பக்கத்தினா் கரோனா தொற்று ஏற்படும் என்று கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் இரண்டு சிறுவா்களும் அவரது தாயாா் உட்பட நால்வா் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.
அதில் 7 வயது சிறுவனுக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அச் சிறுவன் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். இதனால் சிறுவன் வீடு உள்ள பகுதியில் ஜலகண்டபுரம் பேரூராட்சி சாா்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரத் துறையினா் வீட்டில் இருப்பவா்களைத் தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.