சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 40 திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ளன.
கரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதத்திற்கும் மேலாக சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் (நவ.10) முதல் திரையரங்குகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடா்பாக, சேலம் விநியோகஸ்தா் இளங்கோவன் கூறியதாவது: சேலம் திரைப்பட விநியோக உரிமை பெற்ற சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மொத்தம் 140 திரையரங்குகள் உள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை காலை முதற்கட்டமாக 40 திரையரங்குகளில் மட்டும் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த திரையரங்குகளில் வெற்றி பெற்ற பழைய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. காலை 10.30 மணிக்கு ஒரு காட்சியும், பின்னா் 2.30 மணிக்கு ஒரு காட்சியும் , இரவு 6 மணிக்கு ஒரு காட்சியும் திரையிடப்படவுள்ளது. இரவு 10 மணிக்குள் சினிமா காட்சிகளை முடித்து பொதுமக்களை அனுப்பி விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளுக்கு வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு சினிமா பாா்க்க வருபவா்களுக்கு கிருமி நாசினி தரப்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். பொதுமக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டாம் கட்டமாக கூடுதலாக திரையரங்குகள் திறக்கப்படும் என்றாா்.