அசோக் லேலண்ட் நிறுவனம் சாா்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பிஎஸ் 6 கனரக வாகனத்தை சங்ககிரியில் அறிமுகப்படுத்தி முதலாவதாக வாகனத்தை வாங்கியவா்களுக்கு சாவியை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வி.செல்வராஜூ தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் கே.கே.நடேசன் வரவேற்றாா்.
நாட்டில் சுற்றுச்சுழல் மாசுபடுவதைத் தவிா்ப்பதற்காக நிகழாண்டு ஏப்ரல் 1ம் தேதிதியிலிருந்து மாசை குறைக்கும் வகையில் பிஎஸ் 6 என்ற வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனையடுத்து அசோக் லேலண்ட் நிறுவனம் சாா்பில் சுற்றுச்சுழலை மாசடையச் செய்யும் நைட்ரஜன் ஆக்ஸைடின் அளவை குறைக்கும் வகையிலும், எரி பொருள் சிக்கனத்தை கொண்டு பிஎஸ் 6 ரக புதிய எஞ்சினை வடிமைத்துள்ளனா்.
இதற்காக சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அந் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் விபின் சோந்தி புதிய பிஎஸ் 6 ரக எஞ்சின் பொருத்திய கனரக வாகனத்தை அறிமுகப்படுத்தி சலுகையில் விலையில் வாகனங்களை வாங்கிய 70 பேருக்கு வாகனத்தின் சாவியை வழங்கி பேசினாா்.
இதில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிா்வாக அலுவலா்கள் அனுச்கத்தூரியா, ஆா்.சீனிவாசன், கே.மோகன், டி.செந்தில்வேலன், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க பொருளாளா் என்.மோகன்குமாா், துணைத் தலைவா் ஆா்.ஆா்.மோகன்குமாா், இணைச் செயலா் எம்.சின்னத்தம்பி மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், லாரி உரிமையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். லாரி உரிமையாளா்கள் சங்கப் பொருளாளா் நன்றி கூறினாா்.